
சென்னை,
தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக அமைதிக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகள் பயிற்சி கூடாரமாகவும், அடைக்கல பூமியாகவும் இருக்கும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு, இந்தியா தீவிர தாக்குதல் நடத்தி உள்ளது. பஹல்காம் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானின் தீவிரவாத பயிற்சி கூடங்கள், நம் ஆயுதப்படைகளால் ஆபரேஷன் சிந்தூர் மூலம் சேதமாக்கப்பட்டுள்ளது.
நம் ஆயுதப்படை வெற்றிக்கும், பிரதமர் மோடியின் உறுதியான தலைமையையும் சிறப்பிக்கும் வகையில், அடுத்த சில நாட்களுக்கு மிகப்பெரிய அளவில் மூவர்ண கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (புதன்கிழமை) யாத்திரை நடைபெறும். பிற முக்கிய நகரங்களில் மே 15-ந்தேதியும், மற்ற மாவட்ட பேரூர்களில் 16, 17-ந்தேதிகளிலும், சட்டசபை தொகுதிகள், தாலுகாவின் ஊர்கள், பெரிய கிராமங்கள் ஆகிய இடங்களில் மே 18 முதல் 23-ந்தேதி வரையிலும் மூவர்ண கொடி ஏந்திய யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.