104 இந்தியர்கள் நாடு கடத்தியது ஐ.நா விதிபடி சட்ட விரோதமானது: தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார்

2 hours ago 2


புதுடெல்லி: 104 இந்தியர்களை நாடு கடத்திய விவகாரமானது ஐ.நா விதிகளின்படி சட்ட விரோதமானது என்று தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதற்கான நடைமுறைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி 104 இந்தியர்களை கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க ராணுவ விமானம் இந்தியாவிற்கு அழைத்து வந்தது. அரியானா, குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 104 பேரும் கைவிலங்கிட்டும், சங்கலியால் கட்டப்பட்டும் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தியர்களை கடும் குற்றவாளிகளை போல் அமெரிக்க ராணுவம் நடத்திய விவகாரம், நாடாளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வீரேந்திர வசிஷ்டா, தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்திய புலம்பெயர்ந்தோரும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்க இராணுவ விமானத்தில் கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளில் அழைத்து வரப்பட்டனர். இதுபோன்ற செயல்முறைகளானது கடுங்குற்றவாளிகளுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் புலம்பெயர்ந்தோரை இவ்வாறு நடத்தியது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

அவர்களை நாடு கடத்துவது என்பது சட்டவிரோத இடம்பெயர்வு மட்டுமே. ஆனால் அவர்களை நடத்திய விதமானது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் விதிகளின்படி, அமைதியாக இருப்பவர்களுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சக்தியைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. நாடுகடத்தப்பட்டவர்களை கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளில் வைத்திருந்தது அவமானகரமான செயலாகும். மேலும் மனிதாபிமானமற்றது. எனவே இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் முழுமையான விசாரணையை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களை ஆவணப்படுத்த வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்தியா திரும்பியவர்களுக்கு முறையான மருத்துவ மற்றும் உளவியல் உதவிகளை வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, இதுபோன்ற நாடு கடத்தல் விவகாரத்தை மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். இந்திய குடிமக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

The post 104 இந்தியர்கள் நாடு கடத்தியது ஐ.நா விதிபடி சட்ட விரோதமானது: தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article