டெல்லி: வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மே 20க்கு ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு ஒத்திவைத்தது. வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்ஃபு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது.
அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, இடதுசாரி கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், கடந்த மாதம் 17-ம் தேதி நடந்த விசாரணையின்போது, 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியது. மே 5-ம் தேதி, இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்தது. அதுவரை, வக்ஃபு வாரியங்களில் புதிய நியமனங்களை செய்ய மாட்டோம் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்தது. ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, 13-ம் தேதி தான் ஓய்வு பெறுவதால், அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரிக்கும் என்று அறிவித்தார். இதன்படி, தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில், மே 15ம் தேதி இம்மனுக்கள் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
The post வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை மே 20க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! appeared first on Dinakaran.