![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/23/35390595-state-01.webp)
சென்னை,
தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகுதான் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது போன்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு இரண்டு மாதங்களாக தி.மு.க. அரசு சம்பளம் வழங்காததை சுட்டிக்காட்டினால், தங்களது வழக்கமான பாணியான "மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்" என்பது போல டெல்லி பக்கம் கையை நீட்டி தப்பிக்க முயல்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
ஏதோ திமுக ஆட்சி அமைத்த பிறகுதான் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது போன்று அமைச்சர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. எந்த தேசிய கட்சி ஆட்சியில் இருந்தாலும், நமக்கு முறையாக நிதி வழங்குவது இல்லை என்பதை நான் எப்போதும் சொல்லிவரும் கருத்து தான்.
மத்திய அரசின் நிதியைப் பெற்றும் சரி, மத்திய அரசிடம் இருந்து நிதி வராதபோதிலும் சரி, மக்களுக்கு சேரவேண்டிய திட்டங்களில் எந்த தொய்வும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டதில்லை. அப்படியொரு நிர்வாகத் திறமிக்க ஆட்சியை நாங்கள் நடத்தினோம். உங்களைப் போன்று எதற்கெடுத்தாலும் டெல்லியை கைகாட்டும் "பொம்மை" ஆட்சி நடத்தவில்லை.
கருணாநிதி நாணய வெளியீட்டிற்கு மத்திய பா.ஜ.க. மந்திரியை அழைத்து வரத் தெரிந்த உங்களுக்கு, 39 எம்.பி.க்கள் இருந்தும், உரிய அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டிற்கான நிதியை பெறாதது ஏன்? உங்களுக்கு மத்திய அரசிடம் உரிய நிதியைப் பெறுகின்ற நிர்வாகத் திறன் இல்லையென்றால், அதனை ஒப்புக்கொள்ளுங்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது நிதிகளை முறையாகப் பெற்று நிறைவான ஆட்சி செய்தோம் என்பதை நினைவில் கொள்க..!"
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.