*கருத்தரங்கில் கலெக்டர் தகவல்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடற்பாசி வளர்ப்போர் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைப்பதற்கான கருத்தரங்கு கூட்டம் நடந்தது. நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவ பெண்கள் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள், மீனவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தொழில் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடற்பாசி வளர்ப்போர் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைப்பதற்கான கருத்தரங்கு கூட்டம் மிக முக்கியமானதாகும். இதன் மூலம் மீனவர்கள் செய்யும் உற்பத்தியை எவ்வாறு பிறருக்கு விற்பனை செய்து தொழில் புரிய முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் கடனுதவி வழங்குவதற்கு ஏதுவாக வங்கிகள் உறுதுணையாக இருக்கும். இந்த கருத்தரங்கின் மூலம் தொழில் வளம் பெருக்குவதற்கு உரிய தேவைகளை எவ்வாறு பெற்று கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம். மீனவர்களின் வாழ்தாரத்தினை உயர்த்திடும் வகையில் அரசானது பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வளமாவூர் கிராமத்தில் கடற்பாசி பூங்கா கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் மீனவ மகளிருக்கு மாற்று வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திடும் வகையில் அரசானது மோனோலைன் மற்றும் மிதவை மூலம் கடற்பாசி வளர்ப்பதற்கு மானியம் வழங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 305 மீனவ பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர். 1,050 மீனவ பெண்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு சார்பில் ரூ.27.17 லட்சம் மானியமாக வழங்கப்படுள்ளது. கடற்பாசிகளில் அதிக அளவிலான தாது உப்புகள் மற்றும் ஏற்றுமதி தேவை இருப்பதால் இவை சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
கடற்பாசி வளர்ப்போரை ஒருங்கிணைத்து குழு அமைப்பதன் மூலம் அவர்களுக்கு தேவையான கடன் வசதி, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வங்கி நிதி உதவியுடன் ஏற்படுத்தி வியாபாரத்தை பெருக்கிட வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் மூலம் கடற்பாசி வளர்ப்போர், மீனவ பெண்கள் மற்றும் ஏற்றுமதியாளர் ஆகியோர் பயன் பெறுவார் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குநர் (கடல் மீன்வளம்) ஆறுமுகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை நிர்வாக இயக்குநர் ஜாய்ஸ் ஆலிவ் ரெய்ச்சல், துணை பொது மேலாளர் சுமித்ரா, ராமநாதபுரம் மண்டலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பிரபாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post 1,050 மீனவ பெண்களுக்கு வேலை வாய்ப்பு கடற்பாசி வளர்க்க ரூ.27.17 லட்சம் மானியம் appeared first on Dinakaran.