
எந்த மொழியில் பாடினாலும் உற்சாகம், துள்ளல், மகிழ்ச்சி,இன்பம், ஆச்சரியம் சோகம், துக்கம், இரக்கம், என்று கேட்பவரின் மனதில் எல்லா உணர்வுகளையும் கடத்தி விடுவதுதான் ஷ்ரேயா கோஷலை பெரிய வெற்றி பெற வைக்கிறது. 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் மேற்பட்ட இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். 23 வருடங்களாக திரைப்பட உலகில் வெற்றி நடை போடும் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்கத்தில் பிறந்தவர். தனது உருக வைக்கும் குரலால் உலகமெங்கும் பல மொழிகளில் பாடுகிறார்.

தேவதாஸ் படத்தில் பாடிய பாடல்கள் இவருக்கு தேசிய விருது, பிலிம்பேர் விருது பெற்று தந்தது. இந்தியாவின் அனைத்து மொழி இசை அமைப்பாளர்களின் பார்வையும் இவர் மேல் விழுந்தது. தமிழில் முதல் பாடலை கார்த்திக் ராஜா இசையில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த "ஆல்பம்" திரைப்படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய "செல்லமே செல்லம் என்றாயடா" என்ற பாடலை பாடி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தில் இடம்பெறும் 'மாயவா... சாயவா...' பாடலை பாடிய இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

இந்நிலையில், தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடகி ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார். அதில் " கடந்த பிப்ரவரி 13ம் தேதி எனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. எக்ஸ் குழுவைத் தொடர்பு கொள்ள என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தேன். ஆனால் தேவையான எந்த பதிலும் கிடைக்கவில்லை. என்னால் எனது கணக்கை நீக்கக்கூட முடியவில்லை. தயவுசெய்து எனது எக்ஸ் தளத்தில் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் மற்றும் அந்தக் கணக்கிலுள்ள எந்த செய்தியையும் நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.