ஸ்ரீ சக்ரம் அமைந்த திருத்தலங்கள்

2 days ago 2

வசந்த நவராத்திரி 30.3.2025 முதல் 7.4.2025 வரை

*காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர்.
*பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.
*கும்பகோணம் – மயிலாடுதுறை பாதையில் உள்ள பாஸ்கரராஜபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
*திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி தேவியின் ஒரு காதில் ஸ்ரீ சக்ர தாடங்கத்தையும், ஒரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் பிரதிஷ்டைசெய்துள்ளார்.
*கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ சக்ரமே.
*சென்னை காளிகாம்பாள் ஆலய மேருவில் அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அந்தந்த ஸ்தானத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
*சென்னை – திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவிலுள்ள காமகலா காமேஸ்வரி சந்நதியிலும் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
*சென்னை நங்கநல்லூரில் திதி நித்யா தேவிகளின் சக்கரங்களும், விக்கிரகங்களும் இரு புறங்களிலும் திகழ 16 படிகளின் மேல் மகாமேருவுடன் கோலோச்சுகிறாள், ராஜராஜேஸ்வரி.
*நேபாளம் குஹ்யேஸ்வரி ஆலயத்திலுள்ள தாமரை மொட்டின் நடுவே அமைந்துள்ள சக்ரத்தை அனைவரும் தொட்டு பூஜிக்கலாம்; அதில் பொங்கிவரும் தீர்த்தத்தை தலையில் தெளித்துகொண்டுபிரசாதமாவும் உட்கொள்ளலாம்.
*திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்கரத்தை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம்.
*தாம்பரம், மாடம்பாக்கத்திலுள்ள தேனுபுரீஸ்வரர் ஆலய தேனுகாம்பாள் சந்நதியில் சக்ரம் உள்ளது.
*தாம்பரம் – பெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரண மகாமேருவிற்கு இரு புறங்களிலும், வாராஹி, மாதங்கி மற்றும் திதி நித்யா தேவியர் பதினைந்து பேரும் யந்திர வடிவாக அருள்கிறார்கள்.
*திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சந்நதி சக்ர வடிவில் அமைந்திருக்கிறது.
*கேரளாவில் ஓணத்தக்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் அம்பிகை சந்நதியில் சக்ரம் பொருத்தப்பட்டிருக்கிறது.
*காசி ஹனுமான் காட்டில் முத்துஸ்வாமி தீட்சிதர் ஆராதனை செய்த சிவலிங்கத்தின் உச்சியில் சக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது.
*மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபால சுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீ சக்ரம் வைத்து வழிபடப்படுகிறது.
*திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
*திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், ரமணாஸ்ரமத்தில் சக்ரத்திற்குத் தனி சந்நதி உள்ளது.
*புன்னைநல்லூர் மாரியம்மனின் முன் சக்கரப் பிரதிஷ்டை செய்தவர், மகான் சதாசிவபிரமேந்திரர்.

காஞ்சி காமாட்சி

*காஞ்சிபுரத்திலுள்ள எல்லாக் கோயில்களும் காமாட்சியம்மன் கோயிலை நோக்கியே அமைந்துள்ளன. விழாக்களின் போது அந்த ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் எல்லோரும் காமாட்சியம்மன் ஆலயத்தை வலம் வந்து செல்வது வழக்கம்.
*இக்கோயிலின் முதல் பிராகாரத்தில் ஆதிசங்கரர் யோகாசனத்தில், தியான நிலையில் அமர்ந்துள்ள காட்சியைக் காணலாம்.
*காமாட்சி தேவி காரடையான் நோன்பு மேற்கொண்டு கம்பா நதி வெள்ளப் பெருக்கிலிருந்து ஈசனைக் காப்பாற்றியதால் இத்தலத்தில் காரடையான் நோன்பு விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது.
*காமாட்சியம்மன் முன் உள்ள சக்ரத்தில் ‘வசின்யாதி வாக்தேவதைகள்’ எட்டு பேரும் அருள்கின்றனர். இந்த சக்ரத்திற்கே அர்ச்சனை, வழிபாடு, பூஜை எல்லாம் நடக்கின்றன.
*அம்பிகை சக்ரத்தில் பிந்து மண்டல வாசினியாக முக்கோணத்துள் அருள்பவள் என்று கூறப்பட்டுள்ளதால், கருவறை முக்கோண வடிவில் அமைந்துள்ளது.
*காமாட்சியின் கோஷ்டத்தில் வாராஹி, அரூபலட்சுமி, சௌந்தர்ய லட்சுமி, கள்ளவாரணப் பெருமாள் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதில் கள்ளவாரணர் 108 திவ்ய தேச பெருமாள்களில் ஒருவர்.
*வாராஹியின் எதிரே உள்ள சந்தான ஸ்தம்பத்தை வலம் வந்து வணங்குபவர்களுக்கு மழலை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்
*மேற்கு, வடக்கு கோபுரங்களின் இடையே உள்ள கணு மண்டபத்தில் காமாட்சிதேவி பொங்கலுக்கு முந்தைய பத்து நாட்கள் எழுந்தருள்வாள். பொங்கலன்று அந்த மண்டபத்தை காய்கனிகளால் அலங்கரித்து பாத வடிவில் காணப்படும் பங்காரு காமாட்சிக்கு முழுத் தேங்காய் நிவேதனம் நடக்கும்.
*காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள அன்னபூரணியை தர்மத்வாரம், பிக்ஷத்வாரம் போன்ற துவாரங்கள் மூலமும் தரிசிக்கலாம். பிக்ஷத்வாரத்தின் மூலம் அன்னபூரணியை வணங்கி ‘பவதி பிக்ஷாம்தேஹி’ என கையேந்தி பிச்சை கேட்டு வழிபட்டால் நம் வாழ்வில் உணவுப்பஞ்சம் வராது என்கிறார்கள்.
*இத்தலத்தில் மூலஸ்தான காமாட்சி, தபஸ் காமாட்சி, பிலாகாஸ காமாட்சி, உற்சவ காமாட்சி, பங்காரு காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் அருள்கின்றனர்.
*கனிவான தன் கண் வீச்சிலேயே பக்தர்களைக் காப்பதால், அன்னை தன் கரங்களால் அபய&வரத முத்திரை காட்டவில்லை.
*ஈசன் அளித்த இரு நெல்மணிகளைக் கொண்டு 32 அறங்களை வளர்த்ததால் காமாட்சி அறம் வளர்த்த நாயகி என்றழைக்கப்படுகிறாள்.
*காமாட்சியை வழிபட வரும் ஆண்கள் மேலாடை அணிந்திருக்கக் கூடாது என்பது இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் ஒன்று.
*மூல கருவறையில் காமாட்சி அமர்ந்த நிலையில் அருள, உற்சவ காமாட்சி நின்ற நிலையில் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதியோடு தரிசனம் அளிக்கிறாள்.
*இங்கு எழுந்தருளும் முன் செங்கழுநீரோடை பிள்ளையார் கோயில் தெருவில் ஆதிகாமாட்சியாக கோயில் கொண்டாள், தேவி. ஆகவே ஆதிகாமாட்சியை தரிசிப்பதும் அவசியம்.
*ஆதிசங்கரருக்கே இத்தலத்தில் முதல் மரியாதை. அவரது அனுமதி பெற்றே அம்பாள் வீதியுலா வருவாள். அப்போது அம்பாளை நோக்கியபடியே உலா வருவார் ஆதிசங்கரர்.
*அம்பிகையின் கருவறை விமானமும், ஆதிசங்கரரின் விமானமும் தங்கத்தால் ஆனவை.
*ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு நவாவரண பூஜை செய்யப்படுகிறது.
*ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர் திருமணம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும். அதே சமயம் நூற்றுக்கணக்கான பக்த ஜோடிகளுக்கும் திருமணமும் நடக்கும்.
*பிறவியிலேயே பேச்சிழந்த மூகன், காமாட்சியின் அருளால் பேசும் சக்தியைப் பெற்று மூக பஞ்சசதீ எனும் 500 அதியற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

கிருஷ்ணா

The post ஸ்ரீ சக்ரம் அமைந்த திருத்தலங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article