
பெங்களூரு,
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள சஞ்சப்பா நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண்ணிடம் நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவர் பைக்கில் ரெடியாக இருக்க, பின்னால் அமர்ந்திருந்த நபர், பெண்ணின் அருகில் வருகிறார். அந்த பெண், அந்த நபரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தும் அவரால் முடியவில்லை.
பெண்ணை துரத்திச் சென்று கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்துகொண்டிருந்த நகையை பறித்துக்கொண்டு அந்த நபர் தனது கூட்டாளியுடன் பைக்கில் தப்பிச்சென்றார். நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக காட்சிகள், அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த பெண்ணிடம் பறிக்கப்பட்ட நகை, கவரிங் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.