ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சந்நிதி கல் மண்டபத்தில் தேங்கிய மழைநீர் காலை வரை வடியாததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கழிவுநீர் கால்வாயை தூர்வார வலியுறுத்தி பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் என்பது ஆண்டாள் ரெங்கமன்னார் கோயில், வடபத்ரசாயி கோயில் ஆகிய இரு வளாகங்களை கொண்டது. இதில் முதன்மையான வடபத்ரசாயி கோயிலில் தரைத்தளத்தில் நரசிம்மர் சந்நிதியும், மேல் தளத்தில் மூலவர் வடபத்ரசயனர்(பெரிய பெருமாள்) சுயம்பு மூர்த்தியாக சயன திருக்கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். இந்த கோயில் வளாகத்தில் பெரிய கோபுரம் அருகே பெரியாழ்வார் சந்நிதி உள்ளது.