
சென்னை,
மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்), விற்பனைக்குழு செயலாளர்கள் மற்றும் விற்பனை வாரிய பொறியியல் பிரிவு அலுவலர்களுடன் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (03.04.2025) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் செயல்பாடுகளை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்) விற்பனைக்குழு செயலாளர்கள் மற்றும் விற்பனை வாரிய பொறியியல் பிரிவு அலுவலர்களுடன் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்திற்கு வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், வேளாண்மை உழவர் நலத்துறை வ.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் த.ஆபிரகாம், வேளாண்மைத்துறை இயக்குநர் பா.முருகேஷ் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
அனைத்து விற்பனைக்குழுவின் 2024-25ம் ஆண்டின் வரத்து, வரவினம், பொருளீட்டுக்கடன். இலக்கு மற்றும் சாதனை விவரம் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குறைவாக சாதனை அடையப்பெற்ற விற்பனைக்குழு செயலாளர்களுக்கு விரைவில் சாதனை அடைய அறிவுறுத்தப்பட்டது. மேலும், உழவர் சந்தைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள், குளிர்பதன கிட்டங்கியின் பயன்பாட்டு விவரம், முதன்மை பதப்படுத்தும் நிலையங்களின் பயன்பாட்டு விவரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.