திருவனந்தபுரம்: வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை கொச்சி போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் கார்த்திகா பிரதீப் (31). இவர் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, திருச்சூர் உள்பட கேரளாவில் பல்வேறு இடங்களில் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளில் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக இவர் விளம்பரம் செய்தார்.
இதை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை இவரது நிறுவனத்தில் முன்பணமாக கட்டினர். ஆனால் பணம் கட்டி பல மாதங்கள் ஆகியும் கார்த்திகா யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. இதைத் தொடர்ந்து கார்த்திகா பிரதீப்பின் நிறுவனத்திற்கு எதிராக 10 மாவட்ட போலீஸ் நிலையங்களில் ஏராளமான புகார்கள் குவிந்தன. இதனையறிந்த கார்த்திகா திடீரென தலைமறைவானார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில் கோழிக்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த கார்த்திகா பிரதீப்பை கொச்சி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
விசாரணையில் அவர் நூற்றுக்கும் மேற்பட்டோரிடமிருந்து பல கோடி மோசடி செய்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய இளம்பெண் கைது appeared first on Dinakaran.