
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 2022-ம் ஆண்டு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். சிறுமியின் பெற்றோர் காங்கயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அந்த சிறுமி சென்னையில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் சிறுமியை மீட்டனர்.
விசாரணையில் சிறுமி வீட்டில் கோபித்துக்கொண்டு வேலை தேடி சென்னை சென்றபோது, முகலிவாக்கத்தை சேர்ந்த விஷ்ணு (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறி அழைத்துச்சென்று ஓட்டலில் அறை எடுத்து தங்கி சிறுமியை விஷ்ணு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பமானாள்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. போக்சோ குற்றத்துக்காக விஷ்ணுவுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கோகிலா தீர்ப்பளித்தார்.