
சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், கல்யாண்நகர் பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய பெண் ஒருவர் திருமணமாகி கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் முடிச்சூர் சாலை வெற்றிநகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்தபோது பக்கத்து வீட்டில் வசித்த செந்தில் (வயது 40) என்பவருடன் 10 வருடங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அவருடைய கணவருக்கு தெரிய வந்ததால் 4 வருடங்களுக்கு முன்பு செந்திலிடம் பேசுவதை நிறுத்திவிட்டு வீட்டை காலி செய்து கல்யாண்நகர் பகுதிக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் வேலை செய்யும் இடத்துக்கு நேரில் சென்ற செந்தில், தன்னிடம் மீண்டும் பழக வேண்டும் என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.