வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு: வனத்துறை அதிகாரிகள் தகவல்

2 hours ago 2

வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த கணக்கெடுப்பு பணியில் 80 பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் அரிய வகை பறவைகள் உட்பட அனைத்து பறவைகள், வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறை, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பறவை இனம் கண்டறிபவர்களால் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஈர நில பரப்பில் வாழும் பறவைகள், சாதாரண நில பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஈர நில, நில பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கி உள்ளது.

வேலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 9ம்தேதி ஈரநிலங்களில் வசிக்கும் பறவைகளை 57 இடங்களில் கணக்கெடுக்கும் பணி நடந்தது. ஒவ்வொரு இடத்திலும் பறவைகள் குறித்து விவரங்கள் அறிந்த தலா ஒரு ஆர்வலர்கள், சுமார் 3 வன ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர். இந்நிலையில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 57 இடங்களில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பின் போது, 80 பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பறவை கணக்கெடுப்பு பணியின்போது, 80 பறவை இனங்களை சேர்ந்த 3,900 பறவைகள் இருப்பது தெரியவந்தது. கணக்கெடுப்பின் போது புகைப்படம் மற்றும் வீடியோ சென்னையில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு அதிகாரிகள் புகைப்படம், வீடியோ ஆய்வு செய்து, எத்தனை பறவை இனங்கள் இருப்பது உறுதி செய்வர்கள். இதனால், பறவை இனங்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும். மேலும், வரும், 16ம் தேதி நிலப்பரப்புகளில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு நடக்க உள்ளது’ என்றனர்.

The post வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு: வனத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article