சென்னை: டாஸ்மாக் தலைமை நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை சார்ந்த புள்ளிவிவரங்களை உயர்த்தியும் இந்த முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. இந்த முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய கூட்டாளிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில் கலால் வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி முதல் மூன்று நாட்கள் சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.