சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் பயணத்தின்போது, வேலூர் முதல் திருப்பத்தூர் வரை திரண்டு நின்று வழிநெடுக மக்கள் கோலாகலமாக வரவேற்பு அளித்தனர். இது திமுக அரசின் மீது பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதை வெளிப்படுத்தியதாக அமைந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். இதற்காக, சென்னையில் இருந்து கடந்த 25ம் தேதி (புதன்) காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி வழியாக வேலூர் சென்றடைந்தார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்து வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.
பொதுமக்களிடம் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர், பொதுமக்கள் வழங்கிய மனுக்களையும், பொன்னாடைகளையும், பூங்கொத்துகளையும் பெற்றுக் கொண்டார். பொதுமக்கள், ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக முதல்வரை பார்த்து கைகுலுக்கி, செல்பி எடுத்துக் கொண்ட காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன. வேலூர் மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திருப்பத்தூரை நோக்கி மாலை 5.30 மணிக்கு காரில் புறப்பட்ட முதல்வர் திருப்பத்தூருக்கு இரவு 11.30 மணிக்குத்தான், அதாவது 6 மணி நேரம் பயணித்து வந்து சேர்ந்தார்.
அந்த அளவுக்கு அவர் செல்லும் வழி முழுவதும் பொதுமக்கள் நிறைந்து காணப்பட்டதால், ஆங்காங்கே காரை விட்டு இறங்கி தம்மைக் காண ஆர்வமுடன் திரண்டு காத்திருந்த பொதுமக்களை பார்த்துக் கையசைத்து மகிழ்ந்தார். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும் முதல்வர் அருகில் வந்ததும், அவரிடம் கைகளை நீட்டி, கைகுலுக்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பல இடங்களில் பெண்களும் குழந்தைகளும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். இதற்கு முக்கிய காரணம், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 முதல் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ள சிறப்பான திட்டங்களின் பயன்கள்தான் என்பது வெளிப்படையாக தெரிந்தது.
The post வேலூர் முதல் திருப்பத்தூர் வரை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு: திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை appeared first on Dinakaran.