தருமபுரி / மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 16,000 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 32,000 கனஅடியாகவும், மாலையில் 50,000 கனஅடியாகவும் உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது.