வேலூர் : வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு தொடர்ந்து மீன்கள் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். வேலூர் மீன்மார்க்கெட்டில் உள்ளூர் நீர்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் கொச்சி, கோழிக்கோடு, கர்நாடக மாநிலம் மங்களூரு, கார்வார் பகுதிகளில் இருந்தும், கோவாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லரை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 70 முதல் 100 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விற்பனை அமோக காணப்பட்டது. மீன்கள் வரத்து குறைவாக காணப்பட்டாலும் விற்பனை அதிகளவில் இருந்தது. மேலும் சற்று விலையும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு நேற்று 5 லோடுகள் மட்டுமே மீன்கள் வந்தது. அதன்படி, வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1,300 வரையும், சின்ன வஞ்சிரம் ரூ.650 வரையும், ஆயிலா ரூ.170, இறால் கிலோ ரூ.400 வரையும், நண்டு கிலோ ரூ.350-ரூ.450 க்கும், சங்கரா கிலோ ரூ.350 வரையும், ஷீலா கிலோ ரூ.350 வரையும், வெள்ளை கொடுவா ரூ.400க்கும், கண்ணாடி பாறை ரூ.450க்கும், இறால்ரூ.500க்கும், கடல் வவ்வால் கிலோ ரூ.750 வரையும், அணை வவ்வால் ரூ.180 வரையும், சுறா ரூ.700க்கும், தேங்காய் பாறை ரூ.400, நெத்திலி கிலோ ரூ.250க்கும், மத்தி-ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் வரத்து குறைந்துள்ளது. உள்ளூர்களில் தேவை அதிகமாகி உள்ளதால் அங்கிருந்து வர வேண்டிய சரக்கு குறைவாக வந்துள்ளது. விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சில மீன்கள் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும் விற்பனை அமோகமாக நடந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post வேலூர் மார்க்கெட்டில் வரத்து குறைவு மீன்கள் விலை அதிகரித்தும் விற்பனை களைகட்டியது appeared first on Dinakaran.