திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 நாள் தெப்பல் உற்சவம் தொடங்கியது

3 hours ago 2

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 நாள் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்றிரவு ருக்மணி சமேத கிருஷ்ணர் அருள்பாலிக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் புஷ்கரணியில் (குளம்) ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமி முன்னிட்டு 5 நாட்கள் வருடாந்திர தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி முதல் நாள் தெப்பல் உற்சவம் நேற்றிரவு தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமருடன் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது குளத்தின் நான்குபுறமும் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து 2வது நாளான இன்று இரவு ருக்மணி சமேத கிருஷ்ணர் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தொடர்ந்து வரும் 11, 12, 13 ஆகிய 3 நாட்களில் நடக்கும் தெப்பல் உற்சவத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வருகின்றனர். 3வது நாள் 3 சுற்றுகளும், 4வது நாள் 5 சுற்றுகளும், 5வது நாள் 7 சுற்றுகளும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தெப்பல் உற்சவத்தையொட்டி, சகஸ்ர தீப அலங்கார சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

ரூ.4.05 கோடி காணிக்கை;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 79,478 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,667 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.4.05 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 10 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 நாள் தெப்பல் உற்சவம் தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article