வேங்கைவயல் வழக்கு குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசே ஒப்படைக்க வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

2 weeks ago 1

சென்னை: வேங்கை வயல் வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் என தமிழ்நாடு காவல்துறை கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறதுவிசிக தலைவர் திருமாவளவன் கூறினார். வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி சார்பில் நேற்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் கடந்த 20ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 3 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சிபிசிஐடி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது, மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில் கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது.

தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post வேங்கைவயல் வழக்கு குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசே ஒப்படைக்க வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article