சென்னை: மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளை பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்றேன். கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் சு.முத்துசாமியையும், தர்மபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் ஆர்.ராஜேந்திரனையும் நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன். இந்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் தொடர்ந்து பேசி கள நிலவரத்தை கண்காணித்து வருகிறேன். இயற்கை சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post வெள்ள மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.