
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று விளையாடின. இதில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
இந்நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு அணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கு முன் கர்நாடக பேரவை மாளிகை முதல் சின்னசாமி மைதானம் வரை பெங்களூரு அணி வீரர்களின் பேருந்து பேரணி நடத்தப்பட்டது.
பெங்களூரு அணியை வரவேற்க மைதானத்தின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இதனிடையே, சின்னசாமி மைதானத்தின் கேட் பகுதியில் பலர் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, வெற்றி கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் மற்றும் விராட் கோலி இருவர் மட்டுமே நின்று கூட்டத்தினரிடையே உரையாற்றினர். அதற்கு முன், சின்னசாமி ஸ்டேடியத்திற்குள் கூடியிருந்த கூட்டத்தினரின் முன், வெற்றி கோப்பையை காட்டினர்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தது பற்றி வருத்தத்துடன் இன்ஸ்டாகிராமில் கோலி வெளியிட்ட செய்தியில், வார்த்தைகளை இழந்து நிற்கிறேன். முற்றிலும் மனமுடைந்து போனேன் என பதிவிட்டு உள்ளார். அவர் பெங்களூரு அணி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையையும் பகிர்ந்து உள்ளார்.
கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், அவருடைய இன்ஸ்டாகிராமில் அந்த அறிக்கையை பகிர்ந்ததுடன், உடைந்து போன இதயத்தின் எமோஜியையும் வெளியிட்டு உள்ளார்.
இதேபோன்று, பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான டி வில்லியர்சும், எக்ஸ் சமூக ஊடகத்தில் வருத்தங்களை பகிர்ந்து உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. நிர்வாகமும் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.