
கராச்சி,
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அந்நாட்டின் கடற்படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனிர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 2 முறை இந்தியா தாக்கியது.
இந்திய ராணுவத்தின் முன்னறிவிப்பில்லாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் உறுதியான பதிலடி கொடுத்தது. தூண்டி விட்டபோதும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டுடனும், பக்குவத்தன்மையுடனும் நடந்து கொண்டது. நாடுகளுக்கு இடையேயான அமைதியில் உள்ளார்ந்த ஈடுபாட்டுன் இருக்கிறோம் என நாம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளோம் என கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, வருங்காலத்தில் இந்தியா ஏதேனும் தாக்குதல் நடத்தினால், உறுதியான பதிலடி தரப்படும் என்றும் உறுதியாக கூறினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.
இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என அப்போது தெரிவித்தது.