
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.55 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் AI 639 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் மும்பை விமான நிலையம் நோக்கி திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. விமான பயணிகள் மாற்று விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், விமானத்திற்குள் எரிந்த வாசனை வந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மும்பை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த 'ஏர் இந்தியா' நிறுவன ஊழியர்கள், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே தங்கள் முன்னுரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.