
சென்னை,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட 20 குழிகளில் இருந்து ஏராளமான சங்கு வளையல்கள், சில்லு வட்டுகள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், செவ்வந்திகல், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சதுரங்க ஆட்ட காய்கள், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல், சேர நாட்டு செப்பு காசுகள், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கூடுதலாக அகழாய்வு குழிகள் தோண்டுவதற்கு இடம் சுத்தப்படுத்தப்பட்டது. தற்போது இந்த இடத்தில் கூடுதலாக 4 அகழாய்வு குழிகள் தோண்டும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறுகையில், 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது கூடுதலான 4 அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. இதில் ஏராளமான பண்டைய கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.