வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாக பதிவு: ஊட்டியில் உறைபனி; குளிரால் மக்கள் அவதி

2 months ago 10


ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை உறைபனி விழுந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. கடும் குளிரால் மக்கள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர்பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறைபனி விழத்துவங்கும். இந்நிலையில் இம்முறை கடந்த வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில், உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது. நாள்தோறும் நீர் பனி காணப்பட்டது. இதனால் மாலை நேரங்களில் குளிர் அதிகரித்து காணப்பட்டது.

ஆனால், இன்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான உறைபனி விழுந்தது. குறிப்பாக நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உறைபனி விழுந்தது. ஊட்டியில் தலைகுந்தா, எச்பிஎப், பைக்காரா, ஷூட்டிங் மட்டம் மற்றும் கிளன்மார்க்கன் போன்ற பகுதிகளில் லேசான உறைபனி விழுந்தது. மேலும் ஊட்டி நகரில் வாகனங்களில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானத்தில் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வெப்பநிலை மிகவும் குறைந்தது.

இன்று ஊட்டியில் அதிகபட்சமாக வெப்பநிலை 12 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. இதனால் காலை நேரங்களில் கடும் குளிர் வாட்டியது. தேயிலைத் தோட்டம், மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் குளிரால் அவதிப்பட்டனர். உறைபனி விழத் துவங்கியுள்ளதால், பனியிலிருந்து தேயிலை செடிகள், மலை காய்கறிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட துவங்கி உள்ளனர். மேலும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்க ஊழியர்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாக பதிவு: ஊட்டியில் உறைபனி; குளிரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article