
திருவாரூர்,
திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 52). இவர், திருவாரூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேரை விடைத்தாள் திருத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறி ஆசிரியர் சீனிவாசன் தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
அப்போது சீனிவாசன் அந்த மாணவர்களின் உதட்டில் முத்தமிடுவது உள்பட பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாணவர்கள் நடந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு நேரடியாக வந்து ஆசிரியர் நடந்து கொண்டது குறித்து முறையிட்டனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர் ஒருவர் 1098 என்ற தொலைபேசி எண் மூலமாக குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர், மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், ஆசிரியர் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.