கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஒரு வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பத்தர் பிரதிமா அடுத்த தோலாஹத் கிராமத்தில் நேற்றிரவு 9 மணிக்கு ஒரு வீட்டில் திடீரென சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. அந்த வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். வீட்டிற்குள் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
காயமடைந்த ஒரு பெண் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசாரின் விசாரணையில், அந்த குடும்பத்தினர் தங்களது வீட்டில் பட்டாசு தயாரித்து வருவதாகவும் அதனால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு காஸ் சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்ததாகவும் அதனால் பெரும்் விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் நான்கு குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் என்பதால், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி appeared first on Dinakaran.