சென்னை: உணவு மற்றும் மளிகை பொருட்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்விகி, சுமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
டெலிவரி நபர்களை கண்காணிக்க விதிகளை வகுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை இருந்தாலும் கூட, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை எதுவும் அவர்களுக்கு இல்லை. பெரும்பாலும் டெலிவரி செய்யும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. சென்னையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஒருவர், டெலிவரி நிறுவனங்களில் சீருடையை அணிந்து வந்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே, டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், டெலிவரி நபர்களை கண்காணிக்க, முறைப்படுத்த விதிகளை வகுக்குமாறு டிஜிபிக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக டிஜிபிக்கும், ஸ்விகி, சுமோட்டோ, டன்ஸோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
The post வீடுகளுக்கு உணவுபொருள் நேரடியாக விநியோகிக்கும் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: டிஜிபி, டெலிவரி நிறுவனங்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.