
புதுடெல்லி,
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இது மொத்த நிலத்தடி தண்ணீர் பயன்பாட்டு அளவில் 83 சதவீதமாக இருக்கிறது. தண்ணீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு மாநிலங்களில் 22 புதிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மேற்கூறிய தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கூறியிருப்பதாவது: விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. நீருக்கு வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை.
மத்திய நீர்வளத்துறை மந்திரி சி.ஆர் பாட்டில் ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்துவிட்டார். விவசாயிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற தகவல்களை வெளியிட வேண்டாம். வெளிப்படத்தன்மை கருதியும் தவறான தகவல் பரப்படுவதை தடுக்கவும் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.