
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பர்கிட் மாநகரத்தை சேர்ந்த பரமசிவம் என்ற வழக்கறிஞர், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சுவீட் கடை ஒன்றில் பொருட்கள் வாங்கியபோது அந்த கடையின் விளம்பரம் அச்சிட்ட பைக்கு தன்னிடம் ரூ.20 வசூல் செய்யப்பட்டதாகவும், சம்மந்தப்பட்ட கடை நிர்வாகம் தனக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், இதனை சேவை குறைபாடு என்று குறிப்பிட்டனர். இதையடுத்து பரமசிவத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10,000, வழக்கிற்கான செலவு ரூ.5,000 மற்றும் விளம்பர பைக்கு ரூ.20 என மொத்தம் ரூ.15,020 வழங்க சம்பந்தப்பட்ட சுவீட் கடைக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.