விறுவிறுப்பாக நடந்து முடிந்த இடைத்தேர்தல்; ஈரோடு கிழக்கு தொகுதியில் 72% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

2 hours ago 1


ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில், 72 சதவீத வாக்குகள் பதிவாகின. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ம் தேதி மரணமடைந்ததையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 7ம் தேதி அறிவித்தது. அதிமுக, பாஜ, தேமுதிக போட்டியிடவில்லை. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளராக சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரம் கடந்த 3ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான வாக்குச்சாவடியாகவும், அங்கு பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடி அலுவலர், போலீசார் என அனைவரும் பெண்களாகவே நியமிக்கப்பட்டிருந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக ஈரோடு எஸ்கேசி சாலையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியும், மாதிரி வாக்குச்சாவடியாக ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், இளைஞர்கள் வாக்களிக்க ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பாலசுப்ராயலு வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியும் அமைக்கப்பட்டிருந்தது. 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் முன்னதாக அதிகாலை சுமார் 5.45 மணியளவில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மாதிரி வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து சரியாக காலை 7 மணி முதல் பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணி வரை கூட்டமின்றி வெறிச்சோடி இருந்த வாக்குச்சாவடிகளில், காலை 9 மணிக்கு பிறகு கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், முதல் முறை வாக்களிக்கும் இளம் தலைமுறையினர் உட்பட அனைத்து தரப்பு வாக்காளர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா ஈரோடு சம்பத் நகரில் உள்ள அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 2வது வாக்காளராக வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், மனைவி அமுதா, மகள் ருசிதா , மகன் மெகர்வின் ஆகியோருடன் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே மொசுவண்ண வீதியில் உள்ள பிவிபி மழலையர் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மனைவி வரலட்சுமி, அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் நேற்று ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்து, வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி 10.95 சதவீத வாக்குகள் பதிவானது. மாலை 5 மணி நிலவரப்படி 64.02 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தது. வாக்குப்பதிவு முடிந்த 6 மணி நிலவரப்படி 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் உள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டது. இங்கு நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துணை ராணுவ வீரருடன் நாதக வேட்பாளர் வாக்குவாதம்
நாதக வேட்பாளர் சீதா லட்சுமி நேற்று காலை ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் உள்ள கிறிஸ்துஜோதி பள்ளி வாக்குச்சாவடியில், பொதுமக்கள் வாக்களிப்பதை பார்வையிட சென்றார். அப்போது அவர் கட்சி துண்டு அணிந்தபடி வந்தார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தடுத்து, கட்சி அடையாளத்துடன் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதியில்லை என கூறினார். இதனால் துண்டை கையில் மடித்து எடுத்துக்கொண்டு வாக்குச்சாவடிக்குள் சென்றார். அப்போது, அங்கு இருந்த துணை ராணுவ வீரர், துண்டை வெளியே வைத்துவிட்டு வருமாறு கூறினார். இதனால் ராணுவ வீரருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, துண்டை கையில் வைத்தபடியே வாக்குச்சாவடிக்குள் சென்றார்.

246 தபால் வாக்குகள் பதிவு
ஈரோடு இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக வந்து வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 12டி படிவம் விநியோகம் செய்யப்பட்டது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 85 வயதுக்கு மேற்பட்ட 209 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் 47 வாக்காளர்கள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர். இதில், 246 பேர் தபால் வாக்களித்தனர்.

கடந்த தேர்தலைவிட வாக்குப்பதிவு குறைவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2023 பிப்ரவரி 27ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. தற்போதைய இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 72 சதவீதம் வாக்குகள் பதிவானது. 2023ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை விட, இந்த இடைத்தேர்தலில் 2.79 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளன.

The post விறுவிறுப்பாக நடந்து முடிந்த இடைத்தேர்தல்; ஈரோடு கிழக்கு தொகுதியில் 72% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Read Entire Article