சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தலை புறக்கணித்த அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கே கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் தமிழர் கட்சியை அத்தொகுதி வாக்காளர்கள் ஓரங்கட்டியுள்ள தேர்தல் முடிவு மூலம் தெரிகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் நடந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 46 பேர் களத்தில் இருந்தனர். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து பெரிய கட்சிகள் அடுத்தடுத்து விலகியதால் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. பாஜ இதில் போட்டியிடவில்லை. அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. அதேபோன்று தேமுதிகவும் போட்டியிடவில்லை.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் திமுக வேட்பாளராக, சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. அதன்படி, திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சீதாலட்சுமி வெறும் 24,151 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.
அதிமுக போட்டியிடாத நிலையில் நோட்டாவிற்கு கணிசமான வாக்குகள் சென்றுள்ளன. ஆனால் நாம் தமிழர் கடந்த முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றது. ஆனால் இந்த முறை முக்கிய கட்சிகள் எதுவும் போட்டியிடாத நிலையிலும் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி என்றால், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாமல் திமுகவுக்கு சென்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட சதவீத அதிமுக வாக்குகள் நோட்டாவுக்கும், மீதம் உள்ள அதிமுக வாக்காளர்கள் தேர்தலையே தவிர்த்து உள்ளதும் தெரியவந்துள்ளது. மற்ற அனைத்து அதிமுக ஓட்டுகளும் திமுக வேட்பாளருக்கே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 64.58 சதவீத வாக்குகளும், தென்னரசு 25.75 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர்.
ஆனால் அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்ததையடுத்து அக்கட்சியின் வாக்குகளில் பெரும்பான்மையானது திமுகவிற்கு கிடைத்துள்ளது. இதேபோல பாஜ, தமாகா, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் குறிப்பிட்ட சதவீத வாக்குகளும் திமுகவிற்கு கிடைத்துள்ளது. பெரியார் வழி வந்த கட்சிதான் அதிமுகவும் என்பதால், அதிமுகவினர் பெரியாரை பற்றி தவறாக பேசிய சீமானை புறக்கணித்து உள்ளனரோ என்ற விவாதமும் எழுந்துள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. இந்த மோசமான தோல்வி என்பது வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் என்று ஆகிவிடும் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே போட்டியிடுவதால், தேர்தலை புறக்கணித்த கட்சிகளின் வாக்குகள் ஒரு வேளை நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமோ என்று விவாதங்களும் எழுந்தது. ஆனால், தேர்தலில் போட்டியிடாத அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் குறிப்பிடத்தக்க வாக்குகள் திமுகவுக்கே விழுந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வியப்பை ஏற்படுத்திய இடைத்தேர்தல் ரிசல்ட் அதிமுக வாக்குகளை கொத்தாக அள்ளிய திமுக: சீமானை ஓரங்கட்டிய வாக்காளர்கள் appeared first on Dinakaran.