ஏலகிரி: கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலையானது கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில் 4 மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழலில் அமைந்துள்ளது. ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்றும், மலைகளின் இளவரசி என்றும் அழைக்கப்படுகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று சிறந்த சுற்றுலா தலமாக உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு வந்து செல்கின்றனர். நாளுக்குநாள் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால் சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
ஏலகிரி மலையில் உள்ள சுற்றுலா தளங்களை மேம்படுத்தவும் உட்கட்டமைப்பு பணிக்காகவும் ரூ.10 கோடி ஒதுக்கீடு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது பள்ளிகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏலகிரி மலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அதேபோல், நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அங்குள்ள படகு இல்லத்தில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நிலாவூர் பண்டோரா பறவைகள் சரணாலயத்தில் பறவைகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தனர். அங்கு பராமரிக்கப்படும் வெளிநாட்டு பறவைகள், நெருப்புக்கோழிகள், கோழிகள், முயல்கள், அரிய வகை ஓணான்கள், மீன்களை பார்வையிட்டும் அவற்றுக்கு உணவு கொடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர். நெட் கிரிக்கெட், 3டி சினிமா, தொடர் வண்டிகள் ஆகியவற்றில் குழந்தைகள் விளையாடி உற்சாகம் அடைந்தனர்.
The post விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் குவியும் சுற்றுலா பயணிகள்: படகு சவாரி செய்து மகிழ்ச்சி appeared first on Dinakaran.