![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39015157-su.webp)
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தற்போது இவர் தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'விடி12' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கவுதம் தின்னனுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 4.06 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த டீசருக்கு தமிழில் சூர்யாவும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும், இந்தியில் ரன்பீர் கபூரும் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், தமிழில் சூர்யா குரல் கொடுத்ததற்கு விஜய் தேவரகொண்டா மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'சூர்யா அண்ணா மீது எனக்குள்ள பாசம் எல்லோருக்கும் தெரியும். அவர் என்னிடம் இல்லை என்று சொல்லவே மாட்டார். அதனால் நான் அவரிடம் டீசருக்கு குரல் கொடுக்க கேட்பதற்கு முன்பு, நான் எதைக் கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லும்படி கூறினேன். ஆனாலும் அவர் அதை கேட்கவில்லை' என்றார்.