விஜயகரிசல்குளம் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு: பெண்கள் பாண்டி விளையாடப் பயன்படுத்தியவை

2 hours ago 1

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளம் அகழாய்வில், பெண்கள் பாண்டி விளையாடப் பயன்படும் வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதற்காக 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதுவரை நடந்த அகழாய்வில் உடைந்த நிலையில் சுடுமண் உருவப் பொம்மை, வட்டச்சில்லு, தங்கமணி, சூது பவளமணி உட்பட 3,280க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தற்போது 17 மற்றும் 18ம் குழிகளில் அகழாய்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த அகழாய்வில் பெண்கள் பாண்டி விளையாடப் பயன்படும் வட்டச்சில்லுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘நமது முன்னோர்கள் இப்பகுதியில் தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் அகழாய்வில் கிடைத்து வருகின்றன. அதேவேளையில் பொழுது போக்கிற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. இதற்கு சான்றாக ஏராளமான சுடுமண் ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. நேற்று முன்தினம் நடந்த அகழாய்வில் பெண்கள் பாண்டி விளையாடப் பயன்படும் வட்டச்சில்லுகள் அதிகளவில் கிடைத்துள்ளன’ என்றார்.

The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு: பெண்கள் பாண்டி விளையாடப் பயன்படுத்தியவை appeared first on Dinakaran.

Read Entire Article