சென்னை: விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கடந்த 3ம் தேதி எல்கேஜி மாணவி செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமினிக்மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகிய 3பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி குழந்தையின் தந்தை பழனிவேல் மனு தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி போலீசார் விசாரணையை முறையாக நடத்தவில்லை. குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். சிறுமியின் தந்தை பழனிவேல் தொடர்ந்த மனு மீதான விசாரணை பிப்.4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, காவல்துறை, சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.