
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா ஹூவினநாடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ்(வயது 30). நேற்று முன்தினம் காலை இவரது வீட்டிற்குள் நுழைந்த 7 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து ஒசதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கொலையாளிகள் 7 பேரை ஒசதுர்கா போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஒலல்கெரே தாசிகட்டி கிராமத்தை சேர்ந்த சாகர், அபிஷேக், கிரண் குமார், ஒசதுர்காவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சஞ்சு, கரியப்பா, யஷ்வந்த் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்களில் முக்கிய குற்றவாளிகளான சாகர், அபிஷேக், கிரண் குமார் ஆகியோரின் அக்காளான கிரண் என்பவருக்கும், கொலையான சீனிவாசுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. கிரண் ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் சீனிவாஸ், கிரண் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு சீனிவாசுக்கும், வேறொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது கிரணுக்கு தெரியவந்தது. இதை அறிந்த கிரண், சீனிவாசை விட்டு பிரிந்தார். ஆனால் சீனிவாஸ், கிரணை விடவில்லை.வீடு புகுந்து தொல்லை கொடுத்து வந்தார். இதில் கோபம் அடைந்த கிரண் தம்பிகள், கூட்டாளிகளுடன் சேர்ந்து சீனிவாசை கொன்றது தெரியவந்தது.