
நகரி,
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் சதாசிவ காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (வயது 43). அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி அனிதா. அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் பாபாவலி என்பவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்துவந்தார். இவருக்கும், அனிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் செல்போனில் தினமும் பேசி வந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சுரேஷ்பாபு அவரை கண்டித்தார். இதனால் அனிதா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கணவன் ஓட்டலுக்கு சென்றதும், கள்ளக்காதலன் பாபாவலியை வீட்டுக்கு அழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தார். மனைவியை கண்டித்தும் அவர் திருந்தாததால் மனமுடைந்த சுரேஷ்பாபு தினமும் மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். நாளுக்கு நாள் கணவன்-மனைவி இடையே தகராறு வலுத்தது.
கணவனை தீர்த்துக்கட்டினால்தான் உல்லாசமாக இருக்க முடியும் என்று முடிவு செய்த அனிதா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார். எனவே சுரேஷ்பாபுவின் கதையை முடிக்க கள்ளக்காதல் ஜோடி சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தது. சம்பவத்தன்று ஓட்டலை மூடி விட்டு மது அருந்திய சுரேஷ்பாபு, போதையில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். இந்த தகவலை அனிதா கள்ளக்காதலனுக்கு தெரிவித்தார்.
வழியில் தயாராக இருந்த பாபாவலி, சுரேஷ்பாபு மீது காலி மது பாட்டில்களை வீசி எறிந்தார். இதில் நிலைதடுமாறிய சுரேஷ்பாபு தடுமாறி சாலையில் விழுந்தார். உடனே கையில் வைத்திருந்த 'ஸ்குரூ டிரைவரால்' சரமாரியாக பாபாவலி குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் மீது, அருகில் கிடந்த பெரிய பாறாங்கல்லை தூக்கி தலையில் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ்பாபு பிணமானார். உடனே அங்கிருந்து கள்ளக்காதலன் தப்பி ஓடிவிட்டார்
மறுநாள் காலை பிணத்தை கைப்பற்றிய போலீசார், கொலை குறித்து விசாரித்தனர். அப்போது மோப்ப நாய், பாபாவலியின் வீட்டில் போய் நின்றது. அவரை பிடித்து விசாரித்தபோது, கள்ளக்காதல் விவகாரத்தில், அனிதாவுடன் சேர்ந்து சுரேஷ்பாபுவை தீர்த்துக்கட்டியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.