கருப்பாக இருப்பதாக கிண்டல்... கல்லூரி மாணவி எடுத்த விபரீதம் முடிவு

5 hours ago 1

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தலப்பாடி அருகே கின்யா பகுதியை சோ்ந்தவர் ஸ்ரேயா (வயது 19). இவர் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரேயா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெளியே சென்றிருந்த பெற்றோர், வீட்டுக்கு திரும்பி வந்தபோது, ஸ்ரேயா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மங்களூரு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் ஸ்ரேயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஸ்ரேயா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதில், கருப்பாக இருப்பதால் அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். என்னை யாரும் நேசிக்கவில்லை. நான் வாழ விரும்பவில்லை என எழுதியிருந்தார். இதுகுறித்து மங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article