
வன்னியர் சங்க மாநாட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு வரும் வழியில் சீர்காழி அட்டகுளம் அருகே புறவழிச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் வைத்தீஸ்வரன் கோவில் மருவத்தூரைச் சேர்ந்த விஜய் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜயின் மறைவால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது என்ற போதிலும், அவரது குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் காயமடைந்த முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட 5 பேருக்கும் தரமான மருத்துவம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் முழுமையாக உடல்நலம் தேறி வீடு திரும்ப எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.