சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப் 4) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்களின் உரிய சான்றிதழ்கள் குறைபாடாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 22ம் தேதி(இன்று) முதல் பிப்ரவரி 5ம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வன காப்பாளர், வன காவலர் பதவி விண்ணப்பதாரர் உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்ய காலக்கெடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.