சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை, ஏழுகிணறு பகுதியில் அமைந்துள்ள திரு அருட்பிரகாச வள்ளலார் வசித்த இல்லத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியேற்றி தொடங்கி வைத்து, மக்களுடன் உணவருந்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் மூன்று நாட்களுக்கு தினமும் 10,000 சன்மார்க்க அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. மக்கள் மனதில் வாழும் கலைஞர் வள்ளலார் நிகழ்வில் பங்கேற்று ஆற்றிய உரைகள் இன்றும் கல்வெட்டுகளாக உள்ளது. இந்த பகுதிக்கு வள்ளலார் நகர் என்று பெயர் சூட்டி, அருகில் இருக்கக்கூடிய பேருந்து நிலையத்திற்கு வள்ளலார் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டியவர் கலைஞர். கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் வள்ளலாருக்கு முப்பெரும் விழாவை எடுத்தார். வள்ளலார் புகழுக்கு புகழ் சேர்த்த தலைவர் வாழும் வள்ளலார் தமிழ்நாடு முதலமைச்சர்.
வடலூரில் சர்வதேச தியான மையம் அமைந்தால் உலகளவில் வரக்கூடிய வள்ளலார் வழி தோன்றளாளர்களுக்கு மிக சிறப்பான சூழல் அமையும். அதற்கு அரசாணை பிறப்பித்தவர் முதலமைச்சர். பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அங்கும் நீதி படிக்கட்டுகளை சிக்கல்களை களைந்து வென்று அந்த பணிகளை தொடருவோம். வள்ளலார் மறுஉருவக இல்லத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வடலூர் அன்னதான மையத்தில் மரங்களை வெட்டியதற்கு எந்த பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசுக்கு எதிராக இருக்கக்கூடிய சக்திகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளை அறநிலையத்துறை ஆணையரகத்திற்கு நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஜோதி தரிசனத்தை காண வளர்ந்துவிட்ட கிளைகளைத் தான் ஒழுங்குப்படுத்தி இருந்தோம். மரங்களை வெட்டவில்லை என தெரிவித்துள்ளனர். ஆதாரம் இருந்தால் கொடுங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எச்.ராஜாவிற்கு வேறு வேலை இல்லை. அதையே திரும்பத் திரும்ப கூறுகிறார். அரசு தவறாக உத்தரவு பிறப்பித்திருந்தால் அதனை உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிளிக்க இரண்டு மூன்று நாட்களாவது இடைவெளி தேவை.
மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக வியூக மன்னர்களால் எவ்வளவு தூரம் பலன் இருக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்து இருக்கின்றோம். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் ஈரோடு இடைத்தேர்தலில் நின்று அனைவரும் முன் வைப்பு தொகை இழந்தது. இது ஒரு முன்னோட்டம் தான். 2026ல் முதலமைச்சர் கூறியதை போல 200-ஐ தாண்டி உறுதிமிக்க ஒரு ஆட்சியாக அமையும். முதலமைச்சர் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்.மக்களாக இல்லாமல் சாதி, சமயம் என்று பிளவுபடுத்த வேண்டும் என்பவர்களுக்கு ஆன்மீக நண்பர்கள் செவி சாய்க்காமல் ஆன்மீக பூமி என்பதை நிருபிக்கின்ற வகையில் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதங்கத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்காமல், அவரது வாய்ஸ் ஜெயக்குமார் தான் பதில் அளித்துள்ளார். பிற இயக்கங்களில் ஊடுருவது என்னுடைய பழக்கமல்ல. முதலமைச்சர் குறுக்கு வழியில் ஆட்சியை ஏற்பதை விரும்பாதவர். அந்தந்த இயக்கங்களின் பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில் தலையிடுவதை எங்கள் தலைவர் எப்போதும் விரும்ப மாட்டார். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
The post வடலூரில் ஜோதி தரிசனத்திற்காக வளர்ந்துவிட்ட கிளைகளைத் தான் ஒழுங்குப்படுத்தி இருந்தோம், மரங்களை வெட்டவில்லை: பிரசாந்த் கிஷோர் நடிகர் விஜய் சந்திப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு கருத்து appeared first on Dinakaran.