காரைக்குடி : காரைக்குடியில் வங்கி பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் மர்மமாக இறந்தது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுப்பிரமணியபுரம் 4ம் வீதி தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் தேசிய வங்கியின் மண்டல அலுவலகம் மற்றும் அதன் கீழ் பகுதியில் அனைத்து வங்கிகளின் பணம் வைக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
3 மணி நேரத்துக்கு ஒரு காவலர் என ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நேற்று திருப்புவனம் அருகே மாரநாடு பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் மதன்குமார் (25) காலை நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிந்தார்.அப்போது வங்கி பணியாளர்கள் பணம் வைக்கும் மையத்தின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது மதன்குமார் இறந்து கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான காரைக்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை வந்தபிறகே மதன்குமார் இறந்ததற்கான காரணம் தெரியவரும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வங்கி பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் மர்ம மரணம் appeared first on Dinakaran.