
புதுடெல்லி,
வக்பு வாரிய சொத்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த செயல்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 1995-ம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை செய்து மசோதா தயாரித்தது.
இந்த மசோதா கடந்த ஆகஸ்டு மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அங்கே மசோதா மீது பல்வேறு திருத்தங்கள் செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்தது. பின்னர் அந்த திருத்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
அந்த திருத்தங்களுடன் வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் கருப்பு உடையணிந்து அவைக்கு வந்திருந்தனர். இந்த மசோதா முஸ்லிம்களின் உரிமைகளை பறித்து விடும் என குற்றம் சாட்டி அவர்கள் மசோதாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. வக்பு மசோதா தொடர்பாக வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.