புதுடெல்லி: வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதாகக் கூறி, வக்பு வாரிய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் செய்தது. இதற்கான வக்பு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விவாதம் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மக்களவையில் இந்த மசோதா கடந்த 3ம் தேதியும், மாநிலங்களவையில் கடந்த 4ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மசோதா குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவர் கடந்த 5ம் தேதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், வக்பு திருத்த சட்டத்தை நேற்று முதல் அமலுக்கு வந்து ஒன்றிய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘வக்பு சட்ட திருத்தம் 2025ன் விதிகள் ஏப்ரல் 8ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன’’ என கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டம் முஸ்லிம்களின் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், வக்பு திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post வக்பு சட்ட திருத்தம் அமலுக்கு வந்தது: அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.