![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39267451-national-02.webp)
புதுடெல்லி,
மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2,426 புகார்கள் வந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதில் 2025 ஜனவர் 31 நிலவரப்படி, 2,350 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
லோக்பால் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, தலைவர் தவிர, லோக்பாலில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 8-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், அவர்களில் 50 சதவீதம் பேர் நீதித்துறை உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஜிதேந்திர சிங், லோக்பால் அமைப்பில் தற்போது தலைவர் தவிர, 6 உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், அவர்களில் 3 பேர் நீதித்துறை உறுப்பினர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.