லட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றிடும் நான் முதல்வன் திட்டம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

2 weeks ago 4

சென்னை,

2024-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் 2-ம் இடமும், டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடமும், அகில இந்திய அளவில் 23-ம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர். மேலும் தமிழ்நாட்டில் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 134 பேர் யுபிஎஸ்சி நேர்முக தேர்வுக்கு சென்றதில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 பேர் 'நான் முதல்வன்' திட்டத்தில் முழு நேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

எது மகிழ்ச்சி?.... நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article