
வாஷிங்டன்,
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் அவர் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.
பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷியாவுடன் போரிடுவதற்கு உங்கள் நாட்டில் ஆண்கள் இல்லை என்று தெரிவித்தார். இந்த கருத்தால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு அழைத்தார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் அதிகரிக்கவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குறுக்கிட்டார்.
அப்போது டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பார்த்து, "நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் ஒப்பந்தத்திற்குள் வர வேண்டும் அல்லது நாங்கள் இதிலிருந்து வெளியேறிவிடுவோம்" என்று கோபத்துடன் தெரிவித்தார்.
மேலும் "உங்களிடம் போதுமான ராணுவம் இல்லை. நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை எங்களிடம் கூற முடியாது. நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை காட்டுகிறீர்கள், எனக்கு தெரியும் உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று, நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும், ஆனால் இது போன்று ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினமானது, நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள்.
போரில் நீங்கள் வெல்லவில்லை. 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் போர் முடிந்திருக்கும்" என்று அவர் கூறினார்
இதனைத்தொடர்ந்து ஒரு கட்டமைப்பு கனிம வள ஒப்பந்தம் கையெழுத்தானநிலையில், மதியம் 1 மணிக்கு டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி ஆகியோர் கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர், ஆனால் டிரம்ப், ஜெலென்ஸ்கி மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோர் மோதியதால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டன.