
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்று வரும் 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இதில் மார்க்ரம் நிதான ஆட்டத்தை கடைபிடிக்க மறுமுனையில் மார்ஷ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. மிட்செல் மார்ஷ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் (12 ரன்கள்), ரிஷப் பண்ட் (2 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மார்க்ரம் நிலைத்து விளையாடினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆயுஷ் பதோனி 30 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்க்ரம் 53 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதி கட்டத்தில் டேவிட் மில்லர் (27 ரன்கள்) அதிரடியாக விளையாட லக்னோ வலுவான நிலையை எட்டியது. இதன் மூலம் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்துள்ளது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி மும்பை களமிறங்க உள்ளது.